இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீடியா லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பட்டாளம்’. புதிய இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நதியா முக்கிய வேடத்தில் நடிக்க அருண், சத்யா, பாலாஜி, விகாஷ், சுரேஷ், அரி, விக்னேஷ், குரு, இர்பான் மற்றும் கிருபா ஆகிய 9 புதுமுகங்கள் அறிமுகமாகின்றன. கேரளத்தைச் சேர்ந்த ஜாஸி கிப்ட் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ சென்னை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. அதில் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமி பேசுகையில்,
முதல் படம், முதல் காதல் ஆகியவை வாழ்க்கையில் மறக்க முடியாதவை. முதல் படம் எனும்போது அதிலுள்ள அர்ப்பணிப்பு நூறு சதவீதம் முழுமையாக இருக்கும். இந்தப் படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. எனவே தைரியமாக இந்தப் படத்தை தயாரிக்க நினைத்தேன். படமும் சிறப்பாகவே வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நதியா மேடம் மிகவும் துடிப்புடன் காணப்படுகிறார், நடிக்கிறார். தமிழ்த் திரையுலகில் என்னை இதுபோன்று வியக்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஒருமுறை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது எப்படி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இது போன்ற வசீகரத்துடன் இருக்க முடிகிறது என்று கேட்டேன்.
1992க்கு பிறகு நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் என்னுடைய கடைசி படம் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அதனால்தான் அவ்வாறு செயல்பட முடிகிறது என்று அவர் கூறினார். அது போலத்தான் ஒவ்வொரு படத்தையும் நான் என்னுடைய முதலாவது மற்றும் கடைசி படம் என்று நினைத்துக் கொள்கிறேன் என்றார். படத்துக்கு ஷீபா ரோஹன் திரைக்கதை எழுதியுள்ளார். வசனத்தை மோனா கவனிக்க, முத்துக்குமார், நெல்லை பாரதி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
படத்தின் இயக்குனரான ரோஹன் மலையாள-இந்திப்பட இயக்குனர்கள் பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். << முன்செல்ல